ஆண்டு மலருக்குக்
கவியெழுதச் சொல்லியிருந்தார்கள்.
இருள்.
இருட்டைக் காட்டிலும் கறுப்பாக
சுற்றிப்படர்ந்து மூச்சுத்திணற
ஒரு பொறி
ஒளிக்கூர் வாளாகக்
கருமையைக் கிழித்து
இத்யாதி
நெருப்புப் பதங்கள் பொறுக்கிக் கோர்த்து
புரட்சி உணர்ச்சி மறுமலர்ச்சி நிரப்பி
ரத்தமாக ஒரு கவிதை
கிளறி முடித்தேன்.
சென்ற மலரில் பொலிந்த
புரட்சிக் கவிதைக்கும்
இதற்கும்
வேற்றுமை அதிகம் காணப்படவில்லை.
ப்ரளயத் த்வனி.
சிவனார் ஆழிக்கூத்தாட
விஷ்ணு குப்புறப்படுத்திருக்க
ஒளிக்கோளங்கள் சிதற
உள் பிரவாகிக்கும்
உனக்கும் எனக்கும் எவனுக்கும்
புரியக்கூடாத
கவியன்றைச் செதுக்கினேன்.
பார்க்கவே பயமாக இருந்ததால்
கிழித்துப் போட்டுவிட்டேன்.
ஞாயிறு குடித்த
பீடிப்புகை கவிந்த
நீல வானம் பற்றி
இயற்கைக் கவிதை
செயற்கையாக ஜனித்தது
உடன் அடக்கம் செய்யப்பட்டது.
இலக்கண நெருக்கலில்
இலக்கே மரித்துப் போன
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களும்
இசக்கவிகளும்
நீலக்கவிகளும்
பலவும்
முயன்று கைவிட்டபின்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
ஒரு கவிதைக்காக
வார்த்தைகளுக்கு மத்தியில்.
No comments:
Post a Comment